சென்னை: ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்காக புதுச்சேரியில் ஏராளமான இளைஞர்கள் குவிந்துள்ளனர்.
புதுச்சேரியில், எட்டு மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்க 8 மாவட்டங்களை ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர்.
சென்னை ராணுவ ஆள் சேர்ப்பு மையம் சார்பில் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடத்தப்படும் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. வரும் 13ஆம் தேதி வரை முகாம் நடைபெறவுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி இளைஞர்கள் முகாமில் பங்கேற்கவுள்ளனர்.
இம்முகாமுக்கு மொத்தம் 17,400 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் நாள் ஒன்றுக்கு 1,700 பேர் வீதம் உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆன்லைன் பதிவு சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
முதல் நாளில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் தேர்வு ஆகியவை நடைபெற்றது.
இளைஞர்கள் வரும் 8ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இங்கு நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம்.