கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மீண்டும் தொற்றின் பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஒமைக்ரான் என்னும் புதிய நோய்த் தொற்றின் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கை கடுமையாக்கி, பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர்.
திறக்கப்பட்ட பள்ளிகள்
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்பிற்குச் சென்று வருகின்றனர்.
மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு
இந்த நிலையில், மும்பை, தில்லி, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றின் காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உயிர் கொள்ளும் ஒமைக்ரான்
உலக சுகாதார அமைப்பால் கடந்த 2020 நவம்பர் 24ம் தேதியன்று கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் நோய்த் தொற்று இதுவரை கண்டறியப்பட்ட உயிர் கொள்ளும் வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை உள்ளதாகவும், தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பாதிப்பு பரவாத வகையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மூடப்படும் பள்ளிகள்
இதனிடையே, கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றின் புதிய ரகமான ஒமைக்ரான் தொற்று புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
பொதுத் தேர்வுகளில் மாற்றமா?
மேலும், ஆரம்ப வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் சூழலில் திட்டமிட்டபடி அடுத்த 2022 மார்ச் - ஏப்ரல் மாதங்களில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் அதிரடி பதில்
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ஒமைக்ரான் தொடர்பாக சுகாதாரத் துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை. பொது ஊரடங்கு தளர்வை அமல்படுத்தும்போது, தமிழக முதலமைச்சர் மருத்துவ ஆலோசனைக் குழுவை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்.
பள்ளி மூடுவது குறித்து முடிவு
அடுத்து நடைபெறவுள்ள பொது முடக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகள் மூடப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து, ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் அதிகரித்த நிலையில் ஜனவரி 10ம் தேதி வரையில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.