டெல்லி: தமிழகத்தில் பகுதி நேரமாக பொறியியல் (பி.இ., பி.டெக்.) படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 25 முதல் மே 9 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது..
2016-17ஆம் கல்வியாண்டில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கு தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளந. பாலிடெக்னிக் முடித்து, பணியில் இருப்பவர்களிடமிருந்து இந்த பகுதி நேர படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்கள் படிப்புக்குப் பிறகு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
கோவை, சேலம், திருநெல்வேலி, பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் இந்தப் படிப்புகள் தற்போது வழங்கப்படுகின்றன.
ஆன்-லைனில் பதிவு: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் ஏப்ரல் 25 முதல் விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய வரும் மே மாதம் 9 கடைசித் தேதியாகும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்த பின்னர் அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து "செயலர், பகுதி நேர பொறியியல் சேர்க்கை, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, கோவை 641 014' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணமாக ரூ.300-க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பதிவுக் கட்டணம் ரூ. 150 ஆகும்.