சென்னை: ஜிப்மர் மருத்துவ மனைகளின் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பதை அடுத்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடக்கிறது. தற்போது பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வசதியாக ஜிப்மர் மருத்துவ கல்வி துறை அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றியுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டில் 150 எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப் பட உள்ளது. அதற்காக அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் 7ம் தேதி 50 இடங்களில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், சென்னை, சேலம், கோவை, நாகர்கோயில்,திருச்சி, தூத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் மற்றும் புதுச்சேரியில் நுழைவுத் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் மே 4ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறலாம். பொதுப் பிரிவு மாணவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் சிறப்பு பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும். 150 இடங்களுக்கு கடந்த ஆண்டு 90 ஆயிரம் மாணவ மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த ஆண்டு 1 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக விவரம் வேண்டுவோர் www.jipmer.edu.in என்ற இணைய தளத்தின் மூலம் அறியலாம்.


Click it and Unblock the Notifications












