கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மே 12 முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட 6 படிப்புகளும், இளம் தொழில்நுட்பப் படிப்புகளில் உயிர்த் தொழில்நுட்பவியல், உயிர்த் தகவலியல் உள்ளிட்ட 7 படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 2016-17-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம் விநியோகம் குறித்த அறிவிப்பு மே 4-ஆம் தேதி வெளியாகும்.
மாணவர்கள் மே 12-ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.600, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ரூ.300 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 11-ஆம் தேதி கடைசி நாள் என்றார் அவர்.