சென்னை: மாணவர்களுக்கான பகுதிநேர பி.இ சேர்க்கைக்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை வருகிற 28 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 8 கடைசித் தேதியாகும்.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், "கோவை, சேலம், திருநெல்வேலி, வேலூர், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பகுதி நேர பொறியியல் படிப்புகளில் 2015-16 கல்வியாண்டுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
கல்வித் தகுதி: இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படித்து முடித்திருப்பதோடு, படிப்பை முடித்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டியதோடு பணியிலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் இருந்து ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இணையதள விண்ணப்பத்தில் விவரங்களைப் பதிவு செய்தும் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும், படிப்பில் சேர விரும்பும் கல்லூரிகளிலும் விண்ணப்பப் படிவத்தை ரூ. 50 கட்டணம் செலுத்தி நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, பதிவுக் கட்டணம் ரூ. 300-க்கான வரைவோலையுடன் இணைத்து "செயலர், பகுதி நேர பி.இ, பி.டெக் சேர்க்கை, கோவை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை - 641014' என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 8 கடைசித் தேதியாகும்.