சென்னை : தமிழ்நாட்டில் 80 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் 139 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளும் 467 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டுவருகின்றன.
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இந்த மாதம் மே 12ந் தேதி வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் ஒரு சில சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க ஆரம்பித்து விட்டனர்.
அரசு கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் செய்வது இன்னும் தொடங்கப்பட வில்லை. எனினும் விண்ணப்பத்தின் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த வருடம் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர விண்ணப்பத்தின் விலை ரூ. 25/- ஆக இருந்தது. ஆனால் இந்த வருடம் விண்ணப்பத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர விண்ணப்பத்தின் விலை ரூ. 48/- ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 23 அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில வருடங்களாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதும், இந்த படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.