சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டி.பார்ம் ((Diploma In Pharmacy) படித்த மாணவ, மாணவிகள் 16 பேருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்ற தேர்வாகி அதற்கான ஆணையையும் பெற்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலைவாப்புத் துறை மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பல்கலைக்கழக டி.ஃபார்ம் மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நேற்று செய்திருந்தது. இந்த கேம்பஸ் இன்டர்வியூவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது பல்கலைக்கழக நிர்வாகம்.
இதில் 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு துணைவேந்தர் செ.மணியன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பதிவாளர் கே. ஆறுமுகம், மருந்தியில் (பார்மசி) துறைத் தலைவர் கண்ணன், வேலைவாய்ப்பு அதிகாரி ரா.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டி.பார்ம் படித்து முடித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு அதிகாரி ரா.பாஸ்கர் தெரிவித்தார்.
நல்ல சம்பளத்துடன் 16 மாணவ, மாணவிகள் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றச் செல்வதால் அவர்கள் அதிர்ஷ்டம் செய்துள்ளனர் என்று விழாவுக்கு வந்திருந்தவர்கள் வாழ்த்தினர்.