கொரோனா தொற்றின் காரணமாக கலை, பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தொற்றின் பாதிப்பு குறைந்து அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் நேரடியாக வகுப்பிற்கு வர தேவையில்லை என்றும், செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக எழுதுவது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திறக்கப்பட்ட கல்லூரிகள்
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து, சமீப காலமாக தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துவித கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தேர்வுகளில் மாற்றம்
இதனிடையே, சுமார் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக மாணவர்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழலில் ஆன்லைன் வழியிலான வகுப்புகளே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் அம்மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவது குறித்து கல்லூரி நிர்வாகம் பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அண்ணா பல்கலைக் கழகம்
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்விலும், அகமதிப்பீடு தேர்விலும் துறை அளவிலான தேர்வுகளில் ஒரே மாதிரியாக 60 சதவிகிதம் : 40 சதவிகிதம் மதிப்பெண் அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முன்மொழிந்துள்ளது.
அதிரடியான மாற்றம்
குறிப்பாக, அண்ணா பல்கலைக் கழகம் விடுத்துள்ள அறிவிப்பில் எழுத்துத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகள் இரண்டும் தலா 100 மதிப்பெண்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வில் எழுத்துத் தேர்வுகளில் 60 மதிப்பெண்களாகவும், அகமதிப்பீடு மதிப்பெண் 40 மதிப்பெண்களாகவும் மாற்றப்படும் என்று பரிந்துரைத்துள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகள் இரண்டுமே பாடத்தில் மாணவர்களின் இறுதி மதிப்பெண்ணாகக் கணக்கிடப்படும்.
மதிப்பெண்கள் கணக்கீடு
சமீபத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக நிர்வாகக் கூட்டத்தில், அனைத்து பொறியியல் படிப்புகளிலும் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தாள்களுக்கு 60%: 40% வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகளைக் கொண்ட தாள்களில் புறத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகளுக்கு 50%: 50% மதிப்பெண் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான மதிப்பெண்
அதோடு, பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அனைத்து கல்லூரிகளுக்கும் புறத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகளுக்கு ஒரே மாதிரியான மதிப்பெண் வெயிட்டேஜை பின்பற்றுமாறு மாநில அரசுக்கு மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு அதிர்ச்சி
இந்த நிலையில், கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக எழுதுவது குறித்த அறிவிப்பையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதுநிலை மற்றும் முழுநேர பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.ஆர்க். படிப்பு மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
நேரடி வகுப்பு கிடையாது
சமீபத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் கிடையாது என தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்தே கல்வி கற்கலாம்
இது குறித்து, அவர் அளித்த பேட்டியில், அண்ணா பல்கலை கல்லூரிகளில், பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரும், 1ம் தேதி முதல் 15 நாட்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி நிகழ்வுகள் கல்லூரிகளில் நேரடியாக நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, அந்த மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், செய்முறைக்கு மட்டும் நேரடியாக வரவேண்டும் என கூறியுள்ளார்.
ஜனவரி முதல் நேரடி வகுப்புகள்
தொடர்ந்து, ஜனவரியில் இருந்து நேரடி வகுப்புகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர். அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகளில், நவம்பர் 8 முதல் ஒருங்கிணைப்பு பயிற்சி நிகழ்வுகள் 15 நாட்கள் நடத்தப்படும். அதற்குப் பிறகு, அந்தந்த கல்லூரிகள் தங்களின் விடுதி வசதிக்கு ஏற்ப நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ வகுப்புகளை நடத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












