அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், மண்டல ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பலரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இப்பட்டியல் நீண்டுகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
2017 பருவத் தேர்வு
அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற பருவத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் பங்கேற்றவர்களில் 3.02 லட்சம் பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். இவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டது.
முறைகேடான தேர்வு முடிவுகள்
இதனைத் தொடர்ந்து, மறுமதிப்பீட்டுக்குப் பின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் 73,733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 16,636 பேருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருந்தது. இதில் பெரும்பாலான மாணவர்கள் எழுதிய விடைகளுக்கான மதிப்பெண்ணை விட கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சில மாணவர்களுக்கு மிகவும் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததாகவும் புகார்கள் கூறப்பட்டன.
அண்ணா பல்கலை ஊழியர்கள்
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து முறைகேடு நடைபெறும்போது அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா, மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த பி.விஜயகுமார், ஆர்.சிவக்குமார், கண்காணிப்பாளர்களாக இருந்த ஆர்.சுந்தரராஜன், எம்.மகேஷ்பாபு, என்.அன்புச்செல்வன், சி.என்.பிரதீபா, எல்.பிரகதீஸ்வரன், எம்.ரமேஷ் கண்ணன், எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரின் மீது 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழகமும் துறை ரீதியிலான நடவடிக்கையை எடுத்தது.
இருவர் பணிநீக்கம்
மேலும், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட இணைப்புக் கல்லூரி பேராசிரியர்கள் கே.சுரேஷ், சி. குமார் சார்லி பால் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எந்தவொரு கல்லூரியும் பணி வாய்ப்பு அளிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியது.
கூடுதலாக 4 பேராசிரியர்கள்:
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் தற்போது பணியாற்றி வரும் மேலும் 4 பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து அப்பல்கலைக் கழகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
புவியியல் துறை ஆசிரியர்
மேற்குறிப்பிட்ட நான்கு பேரில் ஒருவர் முறைகேடு நடைபெற்ற காலகட்டத்தில் பல்கலைக் கழகத்தில் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தவர் ஆவார். இவர் தற்போது பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
துறைப் பேராசிரியர்கள்
மற்ற மூன்று பேரும் துணைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களாகச் செயல்பட்டவர்கள். இவர்கள் தற்போது பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னியல் மின்னணுவியல் பொறியியல் ஆகிய மூன்று துறைகளில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வந்தனர்.
ஆலோசனைக்குப் பின் முடிவு
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தரப்பில், மறுமதிப்பீட்டு முறைகேட்டில் இந்த நால்வருக்கும் தொடர்பிருப்பது இப்போது தெரியவந்ததால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இப்போது விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து பல்கலைக்கழகம் ஆலோசித்து முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.