அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் படிப்புகளில் பகவத் கீதை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம். குரோம்பேட்டை வளாகம் மற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் MIT, CEG, ACT, SAP உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நடப்பு கல்வியாண்டு முதல் தத்துவவியல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுமத்தின் அறிவுறுத்தல் படி தத்துவவியல் படிப்புடன் பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பொறியியல் மாணவர்களின் 3வது பருவத்தில் தத்துவவியல் பாடம் படிக்க வேண்டி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்கள் பொறியியல் படிப்பில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் மூன்றாவது பருவத்தில் ஆறாவது பாடமாகத் தத்துவவியல் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பகவத் கீதை கற்றுத்தர வேண்டும் என பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த புதிய நடைமுறைக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "பொறியியல் படிக்கும் மாணவர்கள் ஏற்கெனவே அதிக பாடங்களை படித்து வரும் நிலையில், அவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்றப்படாது. எனவே, தத்துவவியல் பாடத்துடன் சமஸ்கிருதம் மற்றும் பகவத் கீதையை கட்டாய பாடமாக இல்லாமல், விருப்பப் பாடமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து விரைவில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












