அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் பி.இ. படித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னைக் கல்லூரி மாணவர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.
2019 ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட இறுதிப் பருவ (8 ஆம் பருவத் தேர்வு) தேர்வு முடிவுகளைக் கடந்த மே மாதமன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 65 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கான பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில் விழாவை முன்னிட்டு, பொறியியல் படிப்பை முடித்துள்ள 60 சதவிகிதம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.
இதில், மாணவர்கள் அதிகம் சேரக் கூடிய பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல், இயந்திரவியல் பொறியியல், கட்டுமான பொறியியல், மின்னியல் மின்னணுவியல் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சென்னை மற்றும் அம்மாவட்டத்தை சுற்றியுள்ள சில தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.