அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதிலும், அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் மத்தியில் தேர்வு குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வெளியாகும்.
இந்த நிலையில், அப்பல்கலைக் கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு புதிக சிறப்பு வாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களைக் காணலாம் வாங்க!
அண்ணா பல்கலைக் கழகம்
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் மீண்டும் எழுத அவ்வப்போது வாய்ப்புகள் வழங்கப்படும். குறிப்பாக, பல ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படு வழக்கம். அந்த வகையில் கடந்த 2001-02ஆம் கல்வியாண்டின் 3-வது செமஸ்டர் முதல் தற்போது வரை அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிரடியான அறிவிப்பு
இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, அரியர் தேர்வுகள் எழுத வழங்கப்பட்ட அவகாச காலக் கெடு முடிவடைந்த மாணவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அவ்வாறான மாணவர்கள் நவம்பர்/ டிசம்பர் 2021, ஏப்ரல்/ மே 2022 மற்றும் நவம்பர்/ டிசம்பர் 2022 ஆகிய செமஸ்டர்களின் போது தேர்வு எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது.
20 வருட அரியர்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் படித்த மாணவர்கள் கடந்த 2001-02ஆம் கல்வியாண்டின் 3வது செமஸ்டர் முதல் வைத்திருக்கும் அரியர் பாடங்களுக்கான தேர்வை மீண்டும் எழுத முடியும். இந்த தேர்விற்கான நடைமுறை, தேர்வு மையம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வரும் அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த சிறப்பு அரியர் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் செப்டம்பர் 24 முதல் விண்ணப்பிக்கலாம். அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது பதிவெண்ணைக் கொண்டு https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
முதலில் Reg_Preview கிளிக் செய்து, பின்னர் Registration Preview Request Form தரவிறக்கம் செய்ய வேண்டும். பிரிவியூ பார்மில் உள்ள பாடங்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம்
தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் வழியாகவே செலுத்தலாம். இதற்கான படிவத்தை முறையாக பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும். இத்தேர்வு குறித்த மேலும் விபரங்களை அறிய 044-22357267, 044-22357303, 044-22357272 மற்றும் 044-22357307 ஆகிய எண்களுக்கு மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.