அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய தேர்வு விதிமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு விதிமுறைகள் தொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். அதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தேர்வில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி மாணவர் ஒருவர் ஒரு பருவத் தேர்வில் தோல்வியடைந்தால் மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற அவருக்கு மூன்று பருவத்தேர்வுகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். அவர் அந்த வாய்ப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால், அடுத்த பருவத்தில் படிப்பைத் தொடர முடியாது என மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிமுறையினால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும். எனவே இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கானது எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகிய நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், இந்த புதிய நடைமுறையால் 2 மற்றும் 3 ஆண்டு படிக்கும் மாணவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு மட்டுமாவது பழைய நடைமுறைப்படி தேர்வைச் சந்திக்க அனுமதி வழங்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து, வழக்கை விசாரணையைத் அடுத்து, இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் உயர் கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அடுத்த விசாரணையை வரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.