அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயர்ப்பலகை தமிழில் நிறுவப்பட்டுள்ள சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக ஆங்கிலத்தில் மட்டுமே அப்பல்கலைக் கழகத்தின் பெயர் சூட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென இப்புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக் கழகம்
அண்ணா பல்கலைக் கழகம் என்றால் அறியாதோர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமானது அண்ணா பல்கலைக் கழகம். குறிப்பாக, தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும் இப்பல்கலைக் கழகம் உள்ளது.
பொறியியல் படிப்பில் பகவத்கீதை
பொறியியல் கல்வி நிறுவனத்தில் மிகவும் பிரபலமான இப்பல்கலைக் கழகத்தில் அரசியல் ஈடுபாடு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகளும் எழும். சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையையும் ஓர் பாடமாக சேர்க்க முடிவு செய்யப்பட்டு அது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
துணைவேந்தர் சூரப்பா
மேலும், தமிழக கல்வி நிறுவனங்களில் மொழித் திணிப்பு நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தில் பகவத் கீதையை திணிக்கிறார்கள், சமஸ்கிருதத்தைப் போதிக்கிறார்கள் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது, அப்பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா, இத்திட்டம் குறித்து விளக்கமளித்தார்.
இது கட்டாயப் பாடம் இல்லை
மேலும், "பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடம் அல்ல, விருப்பப் பாடம்தான். ஏற்கெனவே அதிக பாடங்களைப் படித்து வரும் மாணவர்களுக்கு நாங்கள் சுமையைக் கொடுக்கவில்லை. எனவே, சமஸ்கிருதம் மற்றும் பகவத்கீதை கட்டாயப் பாடமாக இல்லாமல் விருப்பப் பாடமாகத் திட்டமிட்டுள்ளோம்" என்று துறை வேந்தர் சூரப்பா கூறியிருந்தார்.
முதல் முறையாக தமிழில்!
இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலாக உள்ள சிகப்புநிற கட்டடத்தில் COLLEGE OF ENGINEERING GUINDY என ஆங்கிலத்தில் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்த பெயரை, தற்போது "கிண்டி பொறியியல் கல்லூரி" என்று தமிழிலும் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. புதிதாக மாற்றப்பட்ட கல்லூரியின் பெயரில் "கிண்டி பொறியியல் கல்லூரி" அதற்குக் கீழ் COLLEGE OF ENGINEERING GUINDY என்று பொறிக்கப்பட்டுள்ளது.
பெயர்ப்பலகை மட்டுமே தமிழா?
அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம், பெயர்ப்பலகையை தமிழில் மாற்றியது கல்லூரி மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. பலர் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பெருமையுடன் பகிர்ந்துவருகின்றனர். இருப்பினும், பாடப்புத்தகங்களில் சமஸ்கிருத்தை திணித்து, பெயர்ப்பலகையில் மட்டும் தமிழையும் மாற்றுவது எந்த விதத்தில் சரி என்ற கேள்வியையும் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












