கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அண்ணா பல்கலை மற்றும் அதற்குக் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு 2020 ஆண்டிற்கான பருவத் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசுப்பள்ளிகள், சிபிஎஸ்இ, பல்கலைக் கழக தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டு மார்ச் 31ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் நடப்பு 2020 ஆண்டிற்கான பருவத் தேர்வுகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது. கடந்த 2001-2002 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள், இந்த பருவத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பு அளித்திருந்தது.
தற்போது, அண்ணா பல்கலைக் கழகத்தில் பருவத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 23 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முடங்கி விட்டது. தற்போது 144 தடை உத்தரவால், மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படுகிறது.
இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 8 ஆம் தேதி வரையில் மாணவர்கள் தங்களுடைய பருவத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு https://acoe.annauniv.edu என்னும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.