2019-20 ஆம் கல்வியாண்டில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் பி.இ படிப்புகளுக்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்னும் முழு விபரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தற்போது பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அனைத்துக் கல்லூரிகளின் விவரங்களில் இருந்து நடவடிக்கைக்கு ஆளான கல்லூரிகள் எவை என்று மாணவர்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலை ஆய்வு
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் குழு ஆய்வு நடத்தி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வது வழக்கம். அவ்வாறு வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றாத கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கும்.
92 பொறியியல் கல்லூரிகள்
2019-20 கல்வியாண்டில் 92 பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் (1:20), ஆய்வகம், ஆசிரியர் கல்வித் தகுதி, கணினிகள் எண்ணிக்கை போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் முறையாக இடம்பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர் சேர்க்கை குறைப்பு
மேலே குறிப்பிட்ட 92 பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக், இளநிலை பொறியியல் படிப்புகளில் 2019-20 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டது. மேலும், 53 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 25 சதவிகிதமாகப் பல்கலைக்கழகம் குறைத்தது.
முழுத் தடை
அதுமட்டுமின்றி, இந்தக் 92 கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாக தடையும் விதித்து பல்கலைக் கழகம் உத்தரவிட்டது.
கல்லூரிகளின் பட்டியல்
இதனைத் தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர உள்ள மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர் நலன் கருதி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு உள்ளான கல்லூரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. இருப்பினும், பல்கலைக்கழகம் அதனை வெளியிடவில்லை.
வேறு பட்டியல் வெளியீடு
நடவடிக்கைக்கு உள்ளான கல்லூரிகளின் பட்டியலை வெளியிடுவதற்கு மாறாக, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் 2018-19ஆம் கல்வியாண்டில் இடம் பெற்றிருந்த இடங்கள் மற்றும் இப்போது 2019-20 ஆம் கல்வியாண்டில் இடம்பெற்றுள்ள இடங்களின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம்
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 27 பொறியியல் கல்லூரிகளில் ஒன்று மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் 25 முதல் 50 சதவிகிதம் வரை மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம்
அதற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 17 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பொறியியல் கல்லூரிகளின் பல்வேறு படிப்புகளில் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அடுத்தடுத்த கல்லூரிகள்
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் 12 கல்லூரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 கல்லூரிகள், வேலூரில் 7 கல்லூரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 5 கல்லூரிகள், ஈரோட்டில் 9 கல்லூரிகள், கரூரில் 3 கல்லூரிகள், சேலத்தில் 5 கல்லூரிகள், திருப்பூரில் 3 கல்லூரிகள், திருச்சியில் 11 கல்லூரிகள், கடலூரில் 2 கல்லூரிகள், புதுக்கோட்டையில் 4 கல்லூரிகள், தஞ்சையில் 5 கல்லூரிகள், கன்னியாகுமரியில் 7 கல்லூரிகள், திருநெல்வேலியில் 6 கல்லூரிகள், தூத்துக்குடியில் 3 கல்லூரிகள் என மொத்தம் 25 முதல் 50 சதவிகிதம் வரை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
25 முதல் 50 சதவிகிதம்
அதேப் போன்று விழுப்புரத்தில் 5 கல்லூரிகள், மதுரையில் 5 கல்லூரிகள், திண்டுக்கல்லில் 7 கல்லூரிகள், ராமநாதபுரத்தில் 2 பொறியியல் கல்லூரிகள், சிவகாசியில் 3 கல்லூரிகள், அரியலூர், கிருஷ்ணகிரி, நாகை, பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு படிப்புகளில் 25 முதல் 50 சதவிகிதம் வரை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இது போதுமே!
உட்கட்டமைப்பு வசதி குறைபாடு காரணமாக அண்ணா பல்கலைக்கழக நடவடிக்கைக்கு ஆளான கல்லூரிகளின் விவரங்கள் தனியாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், தற்போது பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அனைத்துக் கல்லூரிகளின் விவரங்களில் இருந்து நடவடிக்கைக்கு ஆளான கல்லூரிகள் எவை என்று மாணவர்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என அப்பல்கலைக் கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.