அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வுத் தாள் முறைகேடு காரணமாக 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேட்டின் காரணமாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அண்ணா பல்கலைக் கழகமும் தனியாக விசாரணை நடத்தி வந்தது. இதில் கடந்த 2017-2018ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் மாணவர்களிடம் லஞ்சமாக பணத்தைப் பெற்று விடைத் தாள்களை மாற்றி வைத்ததாக தற்காலிக பணியாளர்கள் மீது குற்றம் எழுந்தது.
இந்நிலையில் பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் தேர்வு முறைகேடு குறித்து அண்ணா பல்கலைக் கழக நிர்வாக உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 7 மண்டலங்களைச் சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.