அண்ணா பல்கலைக் கழக தேர்வு முறைகேடு விவகாரத்தில் இச்செயலில் ஈடுபட்ட ஆசிரியர்களுககு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அப்பல்கலைக் கழகத்திற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த தேர்வு முறைகேடு சம்பவம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு தொடர்பாக, பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றிய 30-க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் இருவர் மீதும் அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதனிடையே, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்துவந்த பேராசிரியர்கள் கே.சுரேஷ், சி.குமார் சார்லி பால் ஆகிய இருவரின் பெயர், பாண் அட்டை எண், பேராசிரியர் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிட்டு, இவர்கள் இருவரும் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட எந்தவொரு கல்விப் பணியிலும் இனி ஈடுபடக் கூடாது எனவும், எந்தவொரு கல்லூரியும் இவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கக் கூடாது எனவும் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்ட இரு பேராசிரியர்களின் தனி விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கத்தினர் புகார் அmளித்தனர்.
அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நடவடிக்கை எடுக்கப்பட்ட இரு பேராசிரியர்களின் புகைப்படம், நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டிருப்பது, அவர்களையும், அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கை இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 499-க்கு எதிரானது.
அந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ள பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடையும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.