எனர்ஜிட்டிக்கா இருந்த 'யூத்ஸ்' எல்லோரும் சோர்வா ஆகுற மாதிரி நேற்று ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அது என்னனு தெரியுனுமா? அப்ப நீங்க இதை படிச்சுதான் ஆகனும்... சரி வாங்க விஷயத்துக்கு போவோம்...!
நிர்வாக காரணங்களால், தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைபெறும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல், நேற்று(ஆக.8) வெளியாகவிருந்த தரவரிசை பட்டியலும் வெளியாகவில்லை.
தேசிய தரவரிசை பட்டியிலில், 61.41 புள்ளிகள் பெற்று, 17வது இடத்தில் இருக்கும் மிகவும் புகழ்பெற்ற தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள, 430க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டில் சேர விண்ணப்பித்து உள்ளனர். நிகழாண்டு 2.11 லட்சம் பேர் 'ஆன்லைனில்' சேர்க்கைக்கு பதிவு செய்தனர்.
அவர்களில், 1.69 லட்சம் பேர் மட்டுமே, விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இவர்களின் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8ல் வெளியாகவிருந்தது.
ஆனால், அறிவித்தப்படி தரவரிசை பட்டியல் வெளியாகவில்லை. அதற்கு மாறாக, வரும்16ம் தேதி வெளியிடப்படும் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல்,சிறப்பு பிரிவுக்கான கவுன்சிலிங் 16ம் தேதிக்கு பதில், 20ம் தேதி; பொது பிரிவுக்கு 22ம் தேதிக்கு பதில், 25ம் தேதி என, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் துணை கவுன்சிலிங்குக்கு அக்., 15க்கு பதில், 22ம் தேதி துவங்கும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை அறிமுகம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், நடப்பாண்டு புதிய நடைமுறைகளை அமல்படுத்த, உயர் கல்வி துறை முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களால், கவுன்சிலிங் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 8ல் வெளியிடப்பட்ட கால அட்டவணையும் தற்காலிகமானது என, உயர் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுக்காக, இன்ஜினியரிங் கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ சீக்கிரம் பட்டியலை வெளியிட்டும், கவுன்சிலிங் நடத்தியும், கிளாஸ்ல படிக்க வையுங்க... ஏற்கனவே இரண்டு வருடம் ஒழுங்கா படிப்பு கிடையாதுனு சொல்லுறாங்க... அய்யோ நான் சொல்லலை.... வீட்டில உள்ளவங்க சொன்னதை நான் சொன்னேன் யூத்ஸ்...!