தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்காமலும், தேர்வுகள் நடத்தாமலும் உள்ள நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் தேர்வுக் கட்டணம் வசூலிப்பது குறித்து முதலமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலை.,யின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களைத் திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் நிலையில், பெரும்பாலான கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்தும் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள்
இதனிடையே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். என அறிவிக்கப்பட்டது. ஆனால், பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என அண்ணா பல்கலை கூறியுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகம்
பருவத் தேர்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டாலும், மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படாமலேயே உள்ளது. தொடர்ந்து, அண்ணா பல்கலைத் தேர்வுகள் இப்போதைக்கு நடத்த முடியாத சூழலே நீடித்து வந்தது.
அண்ணா பல்கலை மீது புகார்
இந்நிலையில், பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படாமலும், ஊரடங்கினால் தேர்வுகள் நடைபெறாமலும் உள்ள நிலையில் மாணவர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணம் வசூலித்தது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் விளக்கமளிக்க வேண்டும் என இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் தனிப்பிரவிக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்
அம்மனுவில், தற்போது அரசு, தனியார் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணமாக இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு ரூ.1,700 வரையில் வசூலிக்கப்படும். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ரூ.3,500 வரையில் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, ஒரு பருவத் தேர்வுக்கு சுமார் 10 லட்சம் மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடி வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வசூலில் வேகம் காட்டும் நிர்வாகம்
இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இளநிலை படிப்புக்கு ரூ.5.61 லட்சம்!!
இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழகத்தின் சர்வதேச உறவுகளுக்கான மைய இயக்குநர் ஜி.நாகராஜன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு 2020-21 ஆம் கல்வியாண்டில் இளநிலை படிப்புகளுக்கு ரூ.5.61 லட்சம் வரையிலும், முதுநிலைப் படிப்புகளுக்கு 1.50 லட்சமும், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்புகளுக்கு ரூ.3.74 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி
இந்த கல்விக் கட்டணத்தை மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அல்லது அபராதத் தொகையுடன் செப்டம்பர் 14ம் தேதி வரையில் கட்டணத்தைச் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்தாவிட்டால் அனுமதி இல்லை
மேலும், கல்விக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை ஆசிரியர்கள் சரிபார்த்து பின், மாணவர்கள் வகுப்புகளில் அனுமதிக்க வேண்டும். செப்டம்பர் 14ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












