சென்னை: கோடை விடுமுறையில் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் ராமானுஜன் கணினி மையம் சார்பில் ஆண்டு தோறும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘‘சி''புரோகிராமிங் கணினிப் பயிற்சியை நடத்தி வருகிறது. வழக்கம் போல இந்த ஆண்டும் அந்த பயிற்சி அளிக்கவேண்டிய ஏற்பாடுகளை அந்த மையம் செய்து வருகிறது.
ஒரு வாரம் மட்டுமே நடக்கும் இந்த பயிற்சி ஏப்ரல் 15, 22, 29 மற்றும் மே மாதம் 7, 14 என ஐந்து கட்டங்களாக நடக்க உள்ளது. தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பல்கலைக் கழகத்தில் இதற்கான வகுப்புகள் நடக்கும். இதற்கு பயிற்சி கட்டணம் ரூ.1000 ‘கோ ஆர்டினேட்டர் சி புரோகிராமிங்' என்ற பெயரில் டிடியாக கொடுக்க வேண்டும்.
சேர்க்கைக்கான மாதிரி விண்ணப்பம் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக கேண்டீன் அருகில் இயங்கும் ராமானுஜன் கணினி மையத்துக்கு மாணவர்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.