பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர இதர வகுப்பு மாணவர்களுக்கு 2021 ஏப்ரல் வரையில் ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடைபெறும் எனும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து, பாதிப்பு குறைந்த நிலையில் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் மீண்டும் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொறியியல் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர இதர ஆண்டு மாணவர்களுக்கு 2021 ஏப்ரல் வரையில் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நாள்தோறும் 5 வகுப்புகளை மட்டுமே ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என்றும், இதர மூன்று பாடவேளைகளைப் புற மதிப்பீட்டுக்குப் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி பருவத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையில் நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.