இன்றைய காலக்கட்டத்தில், ஒரு பட்டத்தை வைத்து கொண்டு வேலைவாய்ப்பு பெறுவது என்பது குதிரை கொம்பாக உள்ளது.
முன்பெல்லாம், நேரடி வகுப்புகளுடன், தொலைதூர கல்வியிலும் ஒரு பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்து, ஒரே கல்வியாண்டில் நேரடியில் ஒரு பட்டமும், தொலைதூர கல்வியில் ஒரு பட்டம் என, இரண்டு பட்டங்களை பெற்று கெத்து காட்டும் மாணவர்களும் உண்டு.

பெரும்பாலான நிறுவனங்கள், தொலைதூர கல்வியில் பெறும் பட்டங்களை பெரிதாக கருத்தில் கொள்வதில்லை என்ற நிலை தான் இன்று வரையும் தொடருகிறது.
இதனால், இன்றைய இளைஞர்கள் தொலைதூர கல்வியில் பட்டங்களை பெறுவதில் பெரிதும் நாட்டம் கொள்வதில்லை.
ஆன்லைன் என்றாகிவிட்ட நிலையில், அதில் பட்டங்களை பெற முனைப்பு காட்டுகின்றனர்.
மாணவர்களை நவீன தொழில்நுட்ப வேலைக்கு தயார்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் புது, புது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இரண்டு பட்டங்கள்
அந்த வரிசையில், பொறியியல் பயிலும் மாணவர்கள் கூடுதல் தகுதியுடன் வேலைவாய்ப்பை பெறும் வகையில், இரண்டு பட்டங்களை பெறும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
அகில இந்திய அளவில் தேசிய தரவரிசையில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிப்பு பாடத்திட்டங்களை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், மாணவர்களை நவீன தொழில்நுட்ப வேலைகளுக்கு, தயார்படுத்தும் வகையில், 'மைனர் டிகிரி' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மைனர் டிகிரி
பின்டெக் மற்றும் பிளாக் செயின் (Fintech and block chain), பொது நிர்வாகம் (Public administration), தொழில்முனைவு (entrepreneurship), பிசினஸ் டேட்டா அனலிஸ்ட் (Buisness data analyst) சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (Environment sustainablity) ஆகிய, ஐந்து பாடங்களையும் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, இரண்டாவது டிகிரி வழங்கப்படும்.
மாணவர்கள் இரண்டாவது டிகிரிக்கான பாடங்களை மூன்றாவது ஆண்டு முதல் படிக்கலாம் என, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் பாடத்தில், முதன்முறையாக தமிழர் மரபு , தமிழரும் தொழில்நுட்பமும் என்கிற பாடங்களை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழர் மரபு மற்றும் தமிழரின் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்கள் முதல் மற்றும் இரண்டாவது செமஸ்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எது எப்படியோ வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. அதற்கேற்ப தங்களை தகுதிப்படுத்தி, வாய்ப்பின் கதவை தட்டும் இளைஞர்களுக்கு கதவு தடையின்றி திறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications












