கொரோனா தொற்றின் காரணமாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு கடந்த அக்டோபர் 1-ந்தேதி தொடங்கி, 28-ந்தேதி வரையில் நடைபெற்றது.
கொரோனா தொற்று மற்றும் பொது முடக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக பொறியியல் கலந்தாய்வு தாமதமாகத் தொடங்கிய நிலையில், கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான முதல் பருவத்திற்கான வகுப்புகள் குறித்த முக்கிய அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், பி.இ., பி.டெக்., பி.ஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெறாத இணைப்பு கல்லூரிகளில் முதல் செமஸ்டர் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் நவம்பர் 23-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகிறது. இம்மாணவர்களுக்கு அனைத்து சனிக் கிழமைகளிலும் (16.1.2020 தவிர) வகுப்புகள் நடத்தப்பட்டு, ஒரு வாரத்துக்கு 6 நாட்கள் வீதம் வகுப்புகள் நடத்தப்படும்.
மேலும், முதல் செமஸ்டருக்கு உட்பட்ட செய்முறைத் தேர்வு 2021 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தொடங்கும் என்றும், அம்மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மார்ச் மாதம் 8-ந்தேதி தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.