சென்னை : தமிழ் நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 554 கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் அண்ணாப்பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் உள்ள 100% இடங்கள், தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 65% இடங்கள் ஆகியவைகள் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அந்தக் கல்லூரிகளில் உள்ள 50% இடங்கள் மட்டும் அண்ணாபல்கலைக் கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
தனியார் கல்லூரி
தனியார் கல்லூரிகளில் உள்ள 65% இடங்கள் அண்ணாப் பல்கலைக் கழகத்தால் நிரப்பப்படும். மீதமுள்ள 35% இடங்களை கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். தனியார் கல்லூரிகளில் 35% இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படுகின்றன.
சிறுபான்மையினர் கல்லூரி
சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் 50% இடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தால் நிரப்பப்படும். மீதமுள்ள 50% இடங்களை சிறுபான்மையினர் கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ளலாம்.
2 லட்சம் இடங்கள்
இந்த வருடம் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் சேருவதற்காக 2 லட்சம் இடங்கள் உள்ளன. கடந்த வருடம் அண்ணாப்பல்கலைக் கழக கலந்தாய்வு மூலம் 1லட்சம் மாணவ மாணவியர்களே என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டம்
இந்த வருடமும் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் வேலையில்லாத் திண்டாட்டம்தான். சாதரண கல்லூரிகளில் சேர்ந்து என்ஜினீயரிங் படிக்கும் போது அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க எந்த தனியார் நிறுவனங்களும் வருவதில்லை. அதனால்தான் மாணவர்களின் ஆர்வம் அதிகமாக குறைந்திருக்கிறது.
கலை அறிவியலில் ஆர்வம்
மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதை விட கலை அறிவியல் படிப்புக்களில் அதிகம் சேருவதற்கே ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தற்போதைய நிலமையாகும். இந்த வருடம் கலை அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கலந்தாய்வில் மாற்றம் இல்லை
அண்ணாப்பல்கலைக் கழக கலந்தாய்வு முறையில் இந்த வருடம் புதிய மாற்றம் ஒன்றுமில்லை. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என அண்ணாப் பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இணைதளத்தில் வெளியிடப்படும்
ஏப்ரல் 2வது வாரத்தில் அண்ணாப் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். 12ம் வகுப்பு முடிவுகள் மே 12ம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும் எனவும் இதுக் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும என்றும் அண்ணாப் பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.