பொறியியல் படிக்கும் மாணவர்கள் அரியர் தேர்வுகளை அடுத்த செமஸ்டரில் எழுதிக் கொள்ள ஏதுவாக புதிய முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த பழைய நடைமுறையின்படி, முதல் பருவத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்து வரும் இரண்டாம் பருவத் தேர்வில் எழுதிக் கொள்ள முடியும்.
இதனிடையே, இந்த பழைய நடைமுறைக்குப் பதிலாக புதிய திட்டத்தினை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்த பொழுது மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பல்கலைக்கழக நிர்வாகக் குழு புதிய திட்டத்தில் திருத்தம் செய்து தற்போது புதிய நடைமுறையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாணவர்கள் முதல் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால், அதனை அடுத்து வரும் இரண்டாவது தேர்வில் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் பருவத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் வெற்றி பெறாமல், 5-ஆவது செமஸ்டரை எழுத முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டின் இறுதிக் கட்ட தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், அதனை அடுத்தடுத்து வரும் 3 செமஸ்டர்களில் எழுதிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரியர் முறையைப் போன்றே, தேர்வு விடைத்தாளை மதிப்பீடு செய்யும் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள், பல்கலைக்கழக நிர்வாகக் குழு ஒப்புதலுக்குப்பின் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.