நடந்துமுடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி.

முதல்வரான நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இவர் தற்போது பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பின் மூலம் மாணாக்கர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தான் பதவியேற்ற நாளிலேயே முதியோர் ஓய்வூதியம், கிராம வேலை வாய்ப்பு என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், அம்மாநில பள்ளி மாணாக்கர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான அறிவிப்பினை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
நோ ஸ்கூல் பேக்
தற்போது மாணவர்களுக்காக இவர் அறிவித்துள்ள திட்டம் ஆந்திரா முழுவதும் நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது. சமீபத்தில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, இனி வரும் சனிக்கிழமைகளில், மாணவர்கள் புத்தகப் பையுடன் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளார்.
இனி விளையாட்டு மட்டுமே
சனிக்கிழமைகளில் படிப்பு அல்லாத பிற திறன்கள் மற்றும் விளையாட்டுக்காக மட்டுமே மாணவர்கள் செலவழிக்க வேண்டும். மேலும், மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
ஊதிய உயர்வும் உண்டு
அதுமட்டுமின்றி சத்துணவுப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications












