பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று நாட்டின் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனன்யா சிங் என்ற 22 வயது இளம் பெண் மத்திய அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வில் வென்று நாட்டின் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்கிற மகத்தான சாதனையை படைத்தார்.
நாட்டின் உயரிய பதவிகளில் முதன்மையானதாக ஐஏஎஸ் பதவி கருதப்படுகிறது. இதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வு எனும் குடிமைப்பணித் தேர்வை வெல்வது மிகவும் சவால் நிறைந்ததாகும்.
குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு முறை தேர்வெழுதினால் மட்டுமே இத்தேர்வில் வெற்றி கிடைக்கும் நிலை உள்ளது. அதிலும் யுபிஎஸ்சி வென்றவர்களில் பெரும்பாலோர் பயிற்சி மையங்களில் பிரத்தியேகமாகத் தயார் ஆகி வருபவர்கள்தாந்.

இந்நிலையில், உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரத்தைச் சேர்ந்த அனன்யா சிங் எந்தப் பயிற்சி மையத்திலும் சேராமல் சுயமாகப் படித்து வெற்றி பெற்றுள்ளார்.
இவர் ஏற்கெனவே தனது பத்தாம் வகுப்பில் 96 சதவீதம், பின்னிரெண்டாம் வகுப்பில் 98.25 சதவீதம் வென்று அவற்றுக்கான பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர்.
பள்ளிப்படிப்பை சிஐஎஸ்சிஇ வழிக்கல்வி மூலம் சிறப்பாக முடித்துவிட்டு டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளியல் (Economics Honors) பாடப்பிரிவில் பட்டம் பெற்று சாதனை படைத்தார்.
சிறுவயது முதல் குடிமைப்பணி அதிகாரி ஆக வேண்டும் என்று அனன்யா சிங் கனவு கண்டு வந்தார். 2019-ம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வெழுத சுயமாகத் தயாரானார். அதே ஆண்டில் நாட்டின் இளம் ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வானார். இதற்காக இவர் எந்த பயிற்சி மையத்திலும் சென்று ஐஏஎஸ் தேர்வுக்குப் படிக்கவில்லை. வீட்டிலேயே அமர்ந்து படித்து வெற்றி பெற்றுள்ளார் அனன்யா.
தற்போது மேற்குவங்கத்தில் பதவி வகித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக 2023-ம் ஆண்டில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அன்சார் ஷேக் என்ற 21 வயது இளைஞர் மிக இளம் வயதில் ஐஏஎஸ் அதிகாரி ஆகி சாதனை புரிந்தார். இருப்பினும் இந்திய பெண்களில் அனன்யா சிங்கின் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.
சமூகத்துக்குச் சேவை செய்வதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் அனன்யா சிங். 22 வயதில் ஐஏஎஸ் பதவியில் அமர்ந்து அனைத்து பெண்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறார் அனன்யா சிங்.


Click it and Unblock the Notifications












