டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் டிக்டாக் செயலியை டெலிட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை சமீபத்தில் தீவிரமடைந்த நிலையில், சீனாவிற்கு உட்பட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்து உத்தரவிட்டது. அதில், டிக்டாக், ஹலோ உள்ளிட்ட பிரபல ஆப்களும் அடங்கும்.
தொழில்நுட்ப துறையில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன, இந்தியாவில் மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ளன. குறிப்பாக செல்போன் செயலிகளான டிக் டாக், ஹலோ போன்றவை இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்களைக் கொண்டிருந்தது.
இதனிடையே, எல்லைப் பிரச்சனையைத் தொடர்ந்து சீன நிறுவனங்களின் செயலிகள் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறி இந்த செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், இதனால், சீனாவிற்கு மிகப் பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும், மத்திய அரசின் இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையிலும் அமேசானில் பணியாற்றும் ஊழியர்கள் டிக்டாக் செயலியை தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கவேண்டும் என ஊழியர்களுக்கு அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.