இந்தியாவில் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தும் வகையில் அமேசான் டாட் காம் என்ற இணைய வழி வர்த்தக நிறுவனம் ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் பல மிகப் பெரிய நிறுவனங்களில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமேசான் டாட் காம்
சியாட்டிலை மையமாகக் கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியாவில் அமைக்கப்படும் புதிய வளாகம், 9 புள்ளி 5 ஏக்கர் நிலப்பரப்பும் ஆயிரக்கணக்கான மில்லியன் டாலர்கள் முதலீடும் கொண்டதாகும். இதில், சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் 62 ஆயிரம் ஊழியர்கள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு பேர் ஹைதராபாத்தில் உள்ளனர்.
ஹைதராபாத் புதிய கட்டிடம்
சர்வேதச அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னிலையில் உள்ள அமேசான் நிறுவனத்தின் புதிய கட்டிடம் ஹைதராபாத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது. 9.5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தக் கட்டிடம் தான் இந்தியாவில் இந்நிறுவனத்தின் முதல் சொந்தக் கட்டிடம் ஆகும்.
62000 முழு நேரப் பணியாளர்கள்
2004-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தியாவில் களமிறங்கிய அமேசான் நிறுவனம் ஹைதராபாத்திலிருந்துதான் தனது பணியை ஆரம்பித்தது. தற்போத, அந்நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் மட்டும் சுமார் 62 ஆயிரம் பேர் முழுநேர ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
லட்சக் கணக்கில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்
அமேசான், தனது சொந்த நாட்டை விட இந்தியாவில்தான் அதிக அளவு ஊழியர்களைக் கொண்டுள்ளது. இதைத் தவிர்த்து 1.55 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமேசானுக்காக இந்தியாவில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 லட்சம் வேலை வாய்ப்புகள்
இதுகுறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் அமித் அகர்வால் கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் 13 மாநிலங்களில் அமேசான் அலுலவகங்கள், டெலிவரி நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
மூன்று மடங்கு அதிகம்
அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமையகத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், அதைவிட மூன்று மடங்கு அதிக ஊழியர்கள் இந்தியாவின் ஹைதராபாத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.
பார்லே பிஸ்கட் நிறுவனம்
இதனிடையே, இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, 10 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதார மந்த நிலையின் எதிரொலியாக பல்வேறு துறைகளும் கடுமையான இழப்பைச் சந்தித்து வரும் நிலையில் பார்லே பிஸ்கட் நிர்வாகம் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் தொழிலாளர்கள்
1929ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட பார்லே நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுக்க அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 10 உற்பத்தி மையங்களும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் மேலும் 125 உற்பத்தி மையங்களும் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வருண் பெர்ரியும் தமது நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது பற்றி கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.