சென்னை: நடப்பு கல்வியாண்டில் பி.இ., பி.டெக் சீட் கிடைக்கப் போவதில்லை என்று மாணவ, மாணவிகள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் விண்ணப்பித்த அனைவருக்குமே நிச்சயம் சீட் உண்டு என்ற நிலை உள்ளது.
பி.இ.. பி.டெக் பயில விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கானரேண்டம் எண் பட்டியல்(சமவாய்ப்பு எண் பட்டியல்) தமிழகத்தில் இன்று ரிலீஸ் ஆகவுள்ளது. இதை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்கு இந்த லிஸ்ட் வெளியாகிறது.
2015-16 கல்வியாண்டில் பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சுமார் 1.90 லட்சம் விநியோகமாயின. ஆனால் இதில் 1,54,450 பேர் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தந்துள்ளனர்.
இப்போதைய நிலவரப்படி 1.80 லட்சம் இடங்கள் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வில் இடம்பெற்றிருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலந்தாய்வு தொடங்கிய பின்னர் தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு ஒப்படைப்பார்கள் என்பதால், இடங்களின் எண்ணிக்கை 2.20 லட்சத்தைத் தாண்டும் என்று தெரிிறது.
இந்த நிலையில், நடப்புக் கல்வி ஆண்டில் பி.இ. படிப்புகளில் சேர 1.54 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதால், அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்ற சந்தோஷமான செய்தி எட்டியுள்ளது.
எனவே மாணவ, மாணவிகள் கவலைப்படாமல் எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்வது மட்டும் என்று யோசித்துக் கொண்டே இருங்கள்.