லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மறுப்பதாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரினைத் தொடர்ந்து அப்பல்கலைக் கழக நிர்வாகத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
அண்ணா பல்கலை ஆய்வு
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 537 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட குழு தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகளை மேற்கொண்டது.
தரமற்ற பொறியியல் கல்லூரிகள்
அண்ணா பல்கலைக் கழக குழு நடத்திய ஆய்வில் முறையான உட்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், மாணவர் சேர்க்கை இல்லாத 92 பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அவற்றுள் ஒரு சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தியும், ஒரு சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைப் பாதியாகக் குறைத்தும் பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
92 பொறியியல் கல்லூரிகள்
மேற்குறிப்பிட்ட தரமற்றவை என அறிவிக்கப்பட்ட 92 பொறியியல் கல்லூரிகளுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது. இருப்பினும் எந்தெந்த கல்லூரிகள் தரமற்றவை என்ற விவரங்களை அறிவிக்காமல் பொதுவாக 92 கல்லூரிகள் தரமற்றவை என அறிவித்ததால் அது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாதிக்கப்படும் மாணவர்கள்
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், தரமற்றவை என அறிவிக்கப்பட்ட 92 கல்லூரிகளின் விவரங்களை அறிவிக்காததால் அந்த கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்கள் தரமான கல்லூரிகளைத் தேர்வு செய்யும் வகையில் குறிப்பிட்ட தரமற்ற கல்லூரிகளின் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் இதுவரை தரமற்ற பொறியியல் கல்லூரிகள் குறித்து விவரங்கள் வெளியிடப்படவில்லை.
லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்
இந்நிலையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட மறுப்பதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் புகார் அளித்துள்ளார்.
பகிரங்கமாக வெளியிட வேண்டும்பகிரங்கமாக வெளியிட வேண்டும்
அப்புகார் மனுவில், தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட மறுப்பதற்கான பின்னணி குறித்து ஆராய வேண்டும் என்றும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் தகுதியற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் விவரங்களைப் பகிரங்கமாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர் சூரப்பா
அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் இதற்கான லஞ்சமாகப் பணம் பெற்றுள்ளனரா எனவும் விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லஞ்ச புகாரில் உண்மை இல்லை
இதனிடையே, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மீதான லஞ்ச புகாரில் எந்த உண்மையும் இல்லை என பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஊழியர் கூட்டமைப்பு கொடுத்த லஞ்ச புகாரில் உண்மை இருந்தால் நேரில் வந்து ஆதாரங்களைச் சமர்ப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.