நாடு முழுவதும், கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்பததும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து எவ்வித முழுமையான அறிவிப்பும் வராமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளுக்கான தேர்வுகளையும் ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையைத் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும்,
- முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்,
- இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்,
- முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்,
- அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்
இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க நான் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications












