ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகள் திறப்பு, தேர்வுகள் தொடர்பான இயர் பிளானரை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வரும் புதிய கல்வியாண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ தற்போது வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய அட்டவணையின்படி இன்ஜினீயரிங் கல்லூரி படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏஐசிடிஇ என்று அழைக்கப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (All India Council for Technical Education - AICTE) என்பது இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழிநுட்பம், மருந்தியல் (Pharmacy), கட்டுமானக்கலை மற்றும் நகரமைப்பு (Architecture & Town Planning), விடு தி மேலாண்மை மற்றும் உணவுத் தொழினுட்பம் (Hotel Management & Catering Technology), பயன்பாட்டுக் கலை மற்றும் தொழில் (Applied Arts & Crafts), மேலாண்மைக் கல்வி (Management Studies) மற்றும் கணிப்பொறி பயன்பாடு குறித்த தொழிற்கல்விப் பாடங்களுக்கு அனுமதி வழங்கும் தன்னாட்சி அமைப்பாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கல்வியாண்டின்போது இன்ஜினீயரிங் கல்லூரிகள் திறப்பு, பருவத் தேர்வு, கல்லூரி விடுமுறை, செமஸ்டர் தேர்வு, உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆண்டு கால அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டு வருவது வழக்கமாக உள்ளது.
அதன்படி வரும் 2024-25கல்வியாண்டுக்கான (2024-25) கால அட்டவணையை ஏஐசிடிஇ தற்போதுதான் வெளியிட்டுள்ளது.
தற்போது ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள கால அட்டவணை தொடர்பான செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி வழங்கும் பணிகள் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. எனவே, அதற்குள் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி பணிகளை தொடங்கவேண்டும்.
மேலும், பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்குதலை ஜூலை 31-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து, சேர்க்கை கலந்தாய்வை முடித்து முதலாம் ஆண்டு மாணவச் செல்வங்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும்.
இதைத் தொடர்ந்து கலந்தாய்வில் (கவுன்சிலிங்) விடுபட்ட காலியிடங்களில் வரும் செப்டம்பர் 15-க்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும். அதனுடன் சேர்க்கையை வரும் செப்டம்பர் 11-க்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை முழுமையாக கல்லூரிகள் திருப்பித்தர வேண்டும். இதை கல்லூரிகள் உறுதி செய்யவேண்டும்.
இதுதவிர, பொறியியல் கல்லூரியில் நேரடியாக 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையையும் (பாலிடெக்னிக் படித்துவிட்டு நேரடியாக இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்கள் சேர்தல்) செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடித்திட வேண்டும்.
இதேபோல், முதுநிலை மேலாண்மை பட்டயப் படிப்பு வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைப் பணிகளை செப்டம்பர் 15-க்குள் முடித்து வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொலைதூர, திறந்தநிலை மற்றும் இணையவழி படிப்புகளை பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை செயல்பாடுகளில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள கால அட்டவணை தொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












