டெல்லி: பொறியியல் படிப்புகளுக்கும் நீட் (தேசிய தகுதி காண் தேர்வு) போன்ற தேர்வை நடத்துவது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆலோசனை நடத்தி வருகிறது.
தற்போது மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தி அதன் மூலம் அந்த சேர்க்கையை நிறைவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் (தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர) நீட் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வில் (தனியார் மருத்துவப் பல்கலைக்கழக சீட்டுகளும் அடங்கும்) வெற்றி பெறும் மாணவர்களுக்கே மருத்துவப் படிப்பு இடங்கள் கிடைக்கும்.
இந்த நிலையில் இந்த நீட் தேர்வைப் போலவே பொறியியல் (பி.இ., பி.டெக்) படிப்புகளுக்கும் அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு தொடர்பாக ஏஐசிடிஇ பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக ஏஐசிடிஇ தலைவர் அனில் டி. சஹஸ்ரபுத்தே கூறியதாவது...
சில மாநிலங்களில் தற்போது ஐஐடி-ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள் அடிப்படையில் பொறியியல் கல்லூரி இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதைப் போலவே ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளைக் கொண்டு ஒற்றை நுழைவுத் தேர்வை நடத்துவது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம்.
ஆனால் இது இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது என்றார் அவர்.