டெல்லி: மாணவர்கள் அதிக அளவில் வராததால் ஆண்டுதோறும் 100 முதல் 200 தொழில்நுட்பக் கல்லூரிகள் வரை மூடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் ஏராளமான தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தக் கல்லூரிகளில் போதுமான அளவுக்கு மாணவர் சேர்க்கை இருப்பதில்லை. இதனால் பெரும்பாலான கல்லூரிகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால் ஆண்டுதோறும் 100 முதல் 200 கல்லூரிகள் வரை மூடப்படுகின்றன என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் ஆமதாபாதில் நிருபர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் இதுபோன்று 150 முதல் 200 கல்லூரிகள் வரை மூடப்படுவது நடக்கிறது. தங்களது உரிமத்தை ரத்து செய்யுமாறு கல்லூரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வருகின்றன.
அதேபோல ஆண்டுதோறும் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி 600 விண்ணப்பங்கள் வருகின்றனர்.
நாட்டில் 10,800 கல்லூரிகள் உள்ளன. இதில் ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் எம்பிஏ, என்ஜினீயரிங் சீட்டுகள் காலியாகவுள்ளன என்றார் அவர்.