சென்னை: என்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த தேசிய அளவில் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் டி. சகஸ்ரபுத்தே கூறினார்.
ஏஐசிடிஇ-இன் தென் மண்டலப் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏஐசிடிஇ தலைவர் சகஸ்ரபுத்தே தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் ஏஐசிடிஇ துணைத் தலைவர் அவினாஷ் பன்ட், என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
என்ஜினீயரிங் கல்லூரி அனுமதி நடைமுறைகள், அதில் உள்ள சில சிக்கல்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் சகஸ்ரபுத்தே கூறியதாவது:
என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை ஒழுங்குபடுத்த அகில இந்திய அளவில் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகளை ஏஐசிடிஇ மேற்கொள்ளும் என்றார் அவர்.