எம்பிஏ பட்டப் படிப்பில் புதிய வகையான ஓர் பிரிவினை அறிமுகப்படுத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு (ஏஐசிடிஇ) ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில், எம்பிஏ பட்டப்படிப்பில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் மாணவர்கள் அந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்பிஏ - இன்னோவேஷன், வென்ட்சர் டெவலப்மெண்ட், என்டர்பிரனர்ஷிப் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படிப்பினை வரும் கல்வியாண்டில் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு நாடு முழுவதும் 15 கல்லூரிகள் ஏஐசிடிஇ அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் சென்னையைச் சேர்ந்த இரு கல்லூரிகளும் உள்ளடங்கும்.
இதுகுறித்து ஆய்வு செய்த ஏஐசிடிஇ தற்போது ஒப்புதலும் அளித்துள்ளது. தொழில் முனைவோர் எம்பிஏ படிப்புக்கான பாடத் திட்டமானது பல்வேறு நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வகை படிப்பின் மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், புதிய தொழில் நிறுவனங்கள் அதிகமாகும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.