சென்னை: அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் சார்பில், தொழில் கல்வியை மேம்படுத்துவதற்காக மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் வகையிலான தொழிற்சாலையுடன் இணைந்த பாடத்திட்டம் (Industry Oriented Syllabus) ஒன்றை அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ) தயாரித்துள்ளது.
தொழில் துறையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள தொழில் நுட்ப வல்லுநர்களை கலந்தாய்வு செய்து இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தொழில் கல்வியில் உள்ள பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியதாக உள்ள இந்த பாடத்திட்டம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. 16 தொழில் துறைகளில் 79 சிறப்புகளை கொண்டுள்ளது இந்த திட்டம்.
வரும் 2020ம் ஆண்டுக்குள் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையின் அளவை 30 சதவீதத்துக்கு உயர்த்துவது அரசின் நோக்கமாக உள்ளதால், உயர் கல்வியில் குறிப்பாக தொழிற்கல்வியில் தொழிற்சாலைகளுடன் இணைந்த கல்வியை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. இவை ஏற்கெனவே உள்ள கல்விமையங்களில் புகுத்தப்படுவதுடன், புதிய கல்வி மையங்களையும் விரிவுபடுத்தவும், மாநில அரசுகள், அரசு சாரா அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், நலிந்த பிரிவினருக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரவும், கல்வி மையங்களை சேவை மையங்களாக மாற்றவும் வாய்ப்பாக அமையும். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.