பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலான ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையினை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தி வந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டுகளுக்கான பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வை, அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாகத் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இதில், தமிழகத்தில் மட்டும் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடைபெற்று முடிந்துள்ளது.
தொடர்ந்து, ஊரடங்கு காரணமாகப் பல்கலைக்கழக மானியக்குழுவானது (யுஜிசி) கல்லூரித் தேர்வுகளை ஏற்கெனவே ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பொறியியல் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வினை நடத்தி முடிக்கவும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.