சென்னை: ஆக்ராவில் நடந்த பி.எட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. பிஎட் தேர்வு எழுதியதோ 12,800 பேர் மட்டுமே. ஆனால் 20 ஆயிரம் பேர் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக்ராவில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் பி.எட் தேர்வு நடைபெற்றது. 12,800 பேர் இந்தத் தேர்வை எழுதினர். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியானபோது 20 ஆயிரம் பேர் வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியானது.
இது மாணவர்களை மட்டுமல்லாமல் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக அம்பேத்கர் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேராசிரியரும், பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளருமான மனோஜ் ஸ்ரீவத்சவா கூறியதாவது: துணைவேந்தர் முகமது முஜாமில் இதுதொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார். எழுதியவர்கள் 12,800 பேர் என்றபோதிலும் 20,089 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.