மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடி உள்ளிட்ட 5 அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த 5 கல்வி நிறுவனங்களுக்கும் வளர்ச்சி நிதியாக ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் மேம்பட்ட கல்வி நிறுவன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேம்பட்ட கல்வி நிறுவன திட்டம்
மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன திட்டத்தின் கீழ் 10 அரசு உயர்கல்வி நிறுவனங்கள், 10 தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் என நாடு முழுவதிலுமிருந்து 20 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதில் தேர்வு செய்யப்படும் அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் தேர்வு செய்யப்படும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிதி அளிக்கப்படாது, இதர சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்கள்
மேலே குறிப்பிட்டுள்ளவாறு கல்வி மற்றும் நிர்வாகத்தில் முழு தன்னாட்சி அதிகாரம், கல்வி நிறுவன வளர்ச்சிக்காக நிதி பெறுதல், நிதியை செலவழிப்பதில் முழு தன்னாட்சி அதிகாரம், மத்திய அரசின் அனுமதி பெறாமலே தலைசிறந்த வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுடன் கூட்டுறவு வைத்துக்கொள்ளுவதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்படும்.
ஜியோ கல்வி நிர்வாகம்
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் கழகம், தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி ஆகிய மூன்று அரசு கல்வி நிறுவனங்களும், மணிபால் உயர்கல்வி நிறுவனம், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், ஜியோ கல்வி நிறுவனம் ஆகிய 3 தனியார் கல்வி நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.
சென்னை ஐஐடி
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக சென்னை ஐஐடி, வாராணசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், காரக்பூர் ஐஐடி, தில்லி பல்கலைக் கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகிய 5 அரசு பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகம்
மேலும், இத்திட்டத்தின் கீழ் மாநில அரசு பல்கலைக் கழகங்களான சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்ட நிதியில் மாநில அரசு பங்களிப்பை உறுதி செய்து உத்தரவாதம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.