சென்னை: 10ம் வகுப்புக்குப் பிறகு மாணவ, மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களில் தங்களது பிறந்த தேதியை மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த செங்கமேடு கிராமத்தில் உள்ள பி கருணாகரன் என்ற மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறந்த தேதியை மதிப்பெண் சான்றிதழில் மாற்றித் தர வேண்டும் என்று மனு செய்திருந்தார்.
அதில் தன் பெற்றோர்கள் சட்டவிபரங்கள் தெரியாததால் தன்னுடைய பிறந்த தேதியை பள்ளியில் சேர்க்கும் போது தவறாக கூறிவிட்டார்கள். என்னுடைய பிறந்த தேதி 1992 ஜனவரி 16 ஆனால் 1989 ஜனவரி 19 என தவறுதலாக கூறிவிட்டார்கள். என்னுடைய 10ம் மற்றும் 12ம் வகுப்புச் சாதன்றிதழில் இதனை சரி செய்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் எஸ்.எஸ்.எல்சி விதிகள் பிரிவு 5ன் படி வயது மற்றும் பெயர்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதனை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு முன்பே செய்ய வேண்டும். அதற்குப் பின் திருத்தம் செய்ய முடியாது எனக் கூறிவிட்டார்.
கருணாகரன் குற்றவியல் கோர்ட் உத்தரவின் படி வருவாய் துறை அதிகாரியிடம் பிறப்புச் சான்றிதழ் வாங்கினேன். பின்பு அதை வைத்து பள்ளி நிர்வாகத்திடம் இருந்து புதிய மாற்றுச் சான்றிதழையும் பெற்றேன். இந்த ஆவணங்களையெல்லாம் வைத்து தேர்வுத் துறை செயலாளரிடம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களிலும் பிறந்த தேதியை மாற்றித் தர வேண்டும் என 2014ம் ஆண்டு மனு ஒன்றினைக் கொடுத்துள்ளேன் எனக் கூறினார்.
மனுதாரர் 1992ம் ஆண்டு பிறந்ததற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. எஸ்.எஸ்.எல்சி விதிகளின் படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்குப் பின் பிறந்த தேதி மற்றும் பெயரை மாற்ற முடியாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்,.