சென்னை: விரைவில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வி.பொன்னுப்பாண்டி, மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதுதொடர்பாக கேள்விகள எழுப்பினர். அவர்களது கேள்விகளுக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 53 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், மாநிலத்தில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 76 அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அதில், 22 மகளிர் கல்லூரிகளாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 5 மகளிர் கல்லூரிகள் பர்கூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், வேப்பூர் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இப்போது பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் மட்டுமே உள்ளன. பல்கலைக்கழகம் என்பதால் அந்தப் படிப்புகள் மட்டுமே நடைமுறையில் இருக்கின்றன. ஆனாலும், இளங்கலை படிப்புகளைத் தொடங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் போதிய இடவசதி இருப்பதால், அங்கு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொடங்க முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












