பிளஸ்-2படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மிகச்சிறப்பான படிப்புக் காத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள மிகச்சிறப்பான மீன்வள படிப்புகளில் சேர ஜுன் 6-ம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவிப்பு செய்துத்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://tnagfi.ucanapply.comஎன்ற இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University-TNJFU) தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012-ம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதாவின் பெயரில் அழைக்கப்படுகிறது.
இப்பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இப்பல்கலைகழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.
இங்கு, நான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F.Sc). எட்டு படிப்புகளில் இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F.Sc), நான்கு படிப்புகளில், மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழத்தில் 11 உறுப்பு கல்லூரிகளும் ஓர் இணைவு கல்லூரியும் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் பிஎப்எஸ்சி படிப்பு தூத்துக்குடி, பொன்னேரி, தலைஞாயிறு மீன்வளக் கல்லூரிகளிலும், பிடெக் படிப்பு (மீன்வள பொறியியல்), பிடெக் (சுற்றுச்சூழல் பொறியியல்) படிப்புகள் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியிலும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்படிப்புகளில் மொத்தம் 371 இடங்கள் உள்ளன.
வரும் கல்வியாண்டில் (2024-25) மீன்வள படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கியுள்ளது.
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் https://tnagfi.ucanapply.comஎன்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜுன் 6-ம் தேதி வரை இந்த படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும்.
தகுதியுள்ள மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டு அதன்மூலம் இந்தப் படிப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்கு உரிய முறையில் கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடத்தப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 04365-256430, 9442601908 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளளாம்.
இவ்வாறு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












