சென்னை: பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான காலம் 2 ஆண்டாக உயர்ந்ததால் பல கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது. 2 ஆண்டாக உயர்ந்ததால் மட்டுமே பல கல்லூரிகள் காற்று வாங்கி வருகின்றன என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு வரை பி.எட்., எம்.எட். படிப்புகள் ஓராண்டாகவே இருந்து வந்தது. இதனால் மாணவ, மாணவிகள் இந்த படிப்புகளை படித்து முடிப்பதில் ஆர்வம் காட்டினர். படிப்புகளை முடித்ததும் அவர்கள் பள்ளிகளில் எளிதில் வேலைவாய்ப்புப் பெறும் நிலை இருந்தது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதன் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பையும் அவர்கள் பெற முடிந்தது.
இந்த நிலையில் பி.எட்., எம்.எட். படிப்புக்கான காலம் இரண்டாண்டாக உயர்த்தப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் நடப்புக் கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல கல்லூரிகள் காற்று வாங்கி வருகின்றன. அரசு கல்லூரிகளில் மட்டுமே இந்த இடங்கள் நிரம்பிவிட்டன.
மற்ற இடங்களில் உள்ள கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் நிரம்பாமலேயே உள்ளன. மேலும் எம்.எட் படிப்பில் சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.
சுயநிதி பி.எட். கல்லூரிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பி.எட். கலந்தாய்வு நடத்திய சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், மொத்தமுள்ள 50 எம்.எட். இடங்களில் 20 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனால், வருகிற 30-ஆம் தேதியோடு முடிக்கப்பட இருந்த எம்.எட். சேர்க்கையை, இப்போது நவம்பர் 6-ஆம் தேதி வரை கல்லூரி நிர்வாகம் நீட்டித்துள்ளது. இதுபோல் மேலும் சில அரசுக் கல்லூரிகளும் சேர்க்கைத் தேதியை நீட்டித்துள்ளன.