கொரோனா பரவி வரும் காலத்தில் நீட்,ஜேஇஇ, போன்ற தேர்வுகளை ஒத்திவையுங்கள் என மத்திய அரசிற்கு நடிகர் சோனு சூட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்துத் துறை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதில், மருத்துவப் படிப்புகளுக்குச் சேர்வதற்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளும் அடங்கும்.
இந்நிலையில், எப்படியேனும் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, வரும் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று நீட் தேர்வும், செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையில் ஜேஇஇ மெயின் மற்றும் செப்டம்பர் 27 ஆம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற தேர்வுகளை நடத்த வேண்டாம் என்றும், ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாணவர்கள், கல்வியாளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அந்த எதிர்ப்புகளுக்கு செவிசாய்க்காமல் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், நடிகர் சோனு சூட் தனது டிவிட்டர் பதிவின் வாயிலாக மத்திய அரசிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், கொரோனா நோய்த் தொற்றினைக் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என மத்திய அரசை சாடியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்களுக்கு நடிகர் சோனு சூட் பல்வேறு உதவிகளைச் செய்தது நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது மாணவர்களுக்கு ஆதரவாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள இந்த கருத்து அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது.