நடிகர் அஜித் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி பிரபல கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக ஒருவர் பணம் மோசடி செய்ததைத் தொடர்ந்து அஜித் கடும் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரைத் துறைத் துறையில் தனக்கென ஓர் ரசிகர் கூட்டத்தையும், மதிப்பையும் கொண்டுள்ள தல அஜித் பெயரில் நடைபெற்றுள்ள இந்த மோசடி திரைத் துறை மற்றும் மாணவ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் உண்டு தனது வேலையுண்டு "தல"
தமிழ் திரைத் துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். மாபெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள அவர் அனைவராலும் தல என்றே அழைக்கப்படுவார். எவ்வித அரசியல் ஈடுபாடுகளும் இன்றி தனது வேலையை மட்டுமே செய்து வரும் தல அஜித்திற்கு அவ்வப்போது புதுப்புது சிக்கல்கள் வருவது வழக்கம்.
கல்லூரி மாணவர் சேர்க்கை
இதனிடையே, கொரோனா பொது முடக்கத்தின் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை திறக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கல்லூரிகளில் ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தல பெயரில் கல்லூரி மோசடி
இந்நிலையில் திரைத் துறையிச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தல அஜித்தின் பெயரை பயன்படுத்தி கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டில் மெமடிக்கல் உள்ளிட்ட சீட்டுகளை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றி வசூலித்து வந்ததாகத் தெரிகிறது. அதேப் போல மற்றொரு நபரும் அஜித்தின் பெயரைப் பயன்படுத்தி பைனான்சியர்கள் சிலரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
கடுப்பான தல அஜித்
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தல அஜித், அதிர்ச்சியடைந்ததோடு இதுபோன்று தனது பெயரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித்திற்கு இவர் ஒருவர்தான்
அதில், சமீபகாலமாகத் தனிநபர்கள் சிலர் நடிகர் அஜித்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். பல வருடங்களாக நடிகர் அஜித்துடன் பணியாற்றி வரும் மேலாளரான சுரேஷ் சந்திரா என்பவர் மட்டுமே அஜித்தின் அனுமதி பெற்ற பிரதிநிதி. சமூக மற்றும் தொழில் ரீதியான செயல்களுக்கு சுரேஷ் சந்திராவைத் விடுத்து வேறு யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம்.
உடனடியாக தெரிவிக்கவும்
மேலும், அஜித்தின் பெயரை பயன்படுத்தி எந்த ஒரு நிறுவனமோ, தனிநபரோ அணுகினால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் என அந்த அறிக்கையில் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காட்டிக்கொடுக்காத தல!
இதனிடையே, தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல் அறிந்த தல அஜித் அவர்களை தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அறிக்கையில் அவர்களின் பெயர் விபரத்தை அவர் குறிப்பிடாமல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.