கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ள எந்த விதமான பள்ளியாக இருந்தாலும், அதில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ பள்ளி மேலாண்மை சங்கத்தின் சார்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் பள்ளிக் கல்வி மேற்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. நீட் தேர்வுக்காக புதிதாக 412 மையங்கள் திறக்கப்பட்டு அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் ஒவ்வொரு பணிகளும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு செயல்படுத்தி வருகிறது.
கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும். ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட எந்தவிதமான பள்ளியாக இருந்தாலும், அதில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படாவிட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் நீட் தேர்விற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் அளிக்கப்பட்ட நீட் பயிற்சியைக் காட்டிலும், அடுத்தடுத்த ஆண்டில் வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் நடப்பாண்டில் நீட் தேர்வில் அதிக தேர்ச்சி இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.